கிண்ணியா பிரதேசத்தில் ஆரம்பக் கல்வியை அபிவிருத்தி செய்வதற்கு பல்வேறு முன்னெடுப்புகளை கிண்ணியா வலயக்கல்வி அலுவலகம் மேற்கொண்டு வருகின்றது.
இந்த விடயம் தொடர்பாக கிழக்கு மாகாண கல்விச்செயலாளர் H. E. M. W. G. திசநாயக்காவுக்கு தெளிவூட்டும் பொருட்டு, ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்வொன்று 2023.08.24 திகதி கிண்ணியா வலயக்கல்வி அலுவலக கேட்போர் கூடத்தில், வலயக்கல்வி பணிப்பாளர் ஏ. நசூகர்கான் தலைமையில் நடைபெற்றது.
கிண்ணியா வலய அதிபர் சங்கத்தின் ஏற்பாட்டில், நடைபெற்ற இந்த வைபவத்தில், கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளருடனான கலந்துரையாடல் இடம் பெற்றது.
இதன் போது, கிண்ணியாவின் ஆரம்பக் கல்வியின் நிலை குறித்து, வலய கல்வி பணிப்பாளர் கருத்து தெரிவிக்கையில்,
கடந்த மூன்று வருட காலத்தில் மேற்கொண்ட, முன்னெடுப்பு குறித்தான சமூகத்தின் பார்வை திருப்திகரமானதாக இருக்கின்றது. குறித்த செயற்பாடுகளோடு மாத்திரம் கடந்த காலங்களில் இருந்து வந்த நிலை மாறி தற்போது வகுப்பறைகளுக்கு நேரடியாக சென்று, பிள்ளைகளின் பயிற்சி கொப்பிகளை கூட பார்த்து, திருத்தி அந்த இடத்திலே ஆசிரியர்களுக்கு வழிகாட்டுகின்ற முன்னெடுப்புகளை வலயக்கல்வி அலுவலக கல்விசார் ஊழியர்கள் செய்து வருகின்றனர்.
தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சையை பொறுத்தளவில் சித்தி வீத்தில் படிமுறையான வளர்ச்சி காணப்படுகின்றது. 2021ல் 54.79 விதமும் 2022 இல் 61.79 வீதமும் பதிவாகியுள்ளது. இருந்தும் வெட்டுப் புள்ளிக்கு மேல் பெறுகின்ற சித்தி வீதம் போதாமல் இருப்பது ஒரு குறைபாடாகும் . இதனை நிவர்த்தி செய்வதற்கு அத்தியாவசிய கற்றல் தேர்ச்சிகளை திருப்திகரமான முறையில் பாடசாலைகளில் அமுல்படுத்துவதில் கவனம் செலுத்தி வருகிறோம் என்று தெரிவித்தார்.
கிண்ணியா வலய ஆரம்பக் கல்வி அடைவு தொடர்பில் கேட்டறிந்து கொண்ட கல்விச் செயலாளர், ஆரம்ப கல்வியின் அவசியம், மாணவர்களின் எதிர்காலத்தை தீர்மானிப்பதில் அதன் முக்கியத்துவம் தொடர்பில் நீண்ட தெளிவினை வழங்கினார். வலயக் கல்வி அலுவலகத்தின் செயற்பாடுகள், முன்னெடுப்புகள் தொடர்பில் தனது மகிழ்ச்சியை தெரிவித்துக் கொண்ட செயலாளர் வலயத்தின் சிறப்பான முன்னெடுப்புகளுக்கு தனது வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொண்டார்.
கிண்ணியா வலய 67 பாடசாலைகளின் அதிபர்கள், வலய அதிகாரிகள் [DDEs, ADEs, ISAs, RPs] உத்தியோகத்தர்களின் பங்கேற்புடன் இடம்பெற்ற இக்கலந்துரையாடலில் கிண்ணியா வலய கல்வி அபிவிருத்தி, சமகால முன்னெடுப்புகள், E.Learning முறையின் பயன்பாடு, பெறுபேற்றுப் பகுப்பாய்வு முறைமை, சவால்கள், தடைகள் என்பன தொடர்பில் கலந்துரையாடப்பட்டன.
அண்மையின் வெளியிடப்பட்ட தரம் 11 மாணவர்களின் நிலையறி பரீட்சைப் பெறுபேறு, அப்பொறிமுறையின் அனுகூலங்கள் தொடர்பில் ICT ஆசிரிய ஆலோசகர் மபாஹிரினால் விளக்கமளிக்கப்பட்டது.
அதிபர் சங்கத்தின் சமகால செயற்பாடுகள், எதிர்காலத் திட்டங்கள், வலயத்துடன் இணைந்து செயற்படுவதன் அவசியம், தேவைப்பாடுகள் தொடர்பில் அதிபர் சங்க தலைவர் M.S. நஸ்ருதீனால் தெளிவுபடுத்தப்பட்டது.
இறுதியாக, கல்வி அமைச்சின் செயலாளர், வலயக் கல்விப் பணிப்பாளரினால் பொன்னாடை போர்த்திக் கௌரவிக்கப்பட்டார்







Post a Comment