திருகோணமலை மாவட்டம் தம்பலகாமம் பிரதேச செயலகப் பகுதியில் தெரிவு செய்யப்பட்ட கால் நடை வளர்ப்பாளர்களுக்கான கறவைப் பசு மாடுகள் வழங்கி வைக்கப்பட்டன.
தம்பலகாமம் பிரதேச செயலாளர் ஜெ.ஸ்ரீபதி தலைமையில் இன்று (27) இந் நிகழ்வு கல்மெடியாவ வடக்கு கிராம சேவகர் பிரிவில் இடம் பெற்றது. முஸ்லிம் எயிட் நிறுவனம் ஊடாக சுமார் 35 பயனாளிகளுக்கு தலா 300000 ரூபா பெறுமதியான கறவை பசு மாடுகள் பயனாளிகளிடத்தில் ஒப்படைக்கப்பட்டன.
மாவட்ட அரசாங்க அதிபர் பி.எச்.என்.ஜயவிக்ரம பிரதம அதிதியாக கலந்து கொண்டு கறவைப்பசுமாடுகளை வழங்கி வைத்தார்.
வழங்கப்பட்ட கறவைப்பசுக்களை நல்ல முறையில் வளர்ப்பதன் மூலம் வாழ்வாதாரத்தை மேம்படுத்திக்கொள்ளக்கூடியதாக அமையும். தேசிய உற்பத்திசார் விடயங்களுக்கு கூடிய கவனம் செலுத்தி செயற்படல் மூலம் தற்போதைய சூழ்நிலையில் நாட்டின் பொருளாதாரத்திற்கு வலுசேர்க்க முடியும் என இதன்போது அரசாங்க அதிபர் மேலும் தெரிவித்தார்.
உதவி பிரதேச செயலாளர் இரா.பிரசாந்தன், பிரதி திட்டமிடல் பணிப்பாளர் ஐ.முஜீப், முஸ்லிம் நிறுவனத்தின் இலங்கைக்கான வதி விடப் பிரதிநிதி ஏ.சி.பைசர்கான், கால் நடை வைத்தியர் உட்பட பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், கிராம சேவகர்கள் என பலர் கலந்து கொண்டனர்.


Post a Comment