அரசாங்கம் மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களினால் நடைமுறைப்படுத்தப்பட்ட வீடமைப்பு திட்டங்கள் பலவற்றில் உரிய பயனாளிகள் வசிக்காமல் இவை கைவிடப்பட்ட நிலையில் காணப்படுவதாகவும் இவ்வாறான வீடுகளினை இனங்கண்டு மாவட்டத்தில் வீடற்றவர்களுக்கு வழங்கும் பொறிமுறையொன்றை தயாரித்து செயற்பட வேண்டும் என திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் மாவட்ட ஒருங்குணைப்புக்குழுவின் இணைத்தலைவருமான கபில நுவன் அத்துகோரல தெரிவித்தார்.
திருகோணமலை மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுக்கூட்டம் நேற்று (28) மாவட்ட செயலகத்தில் நடைபெற்றபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
மாவட்டத்தில் உணவுப்பாதுகாப்பு வேலைத்திட்டம் மாவட்ட , பிரதேச அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மாவட்டத்தில் அரச நெல் கொள்வனவு சிறப்பான முறையில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இதுவரை 4500 மெற்றிக்தொன் நெல் மாவட்ட விவசாயிகளிடமிருந்து கொள்வனவு செய்யப்பட்டுள்ளன. இந்நெல் மாவட்டத்தை சேர்ந்த சுமார் 88000 குடும்பங்களுக்கு மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் குடும்பமொன்றுக்கு 10 கிலோகிராம் என்றடிப்படையில் இலவசமாக பகிர்ந்தளிக்கப்படவுள்ளன. மேலதிகமாக கொள்வனவு செய்யப்படும் நெல் தேவையுடைய மாவட்டத்திற்கு அரிசியாக மாற்றப்பட்டு வழங்கப்படவுள்ளதாக இதன்போது அரசாங்க அதிபர் பி.எச்.என்.ஜயவிக்ரம தெரிவித்தார்.
சிறுபோகத்திற்கான TSP உரம் விவசாயிகளுக்காக கிரம மான முறையில் வழங்கப்பட்டு வருவதாக இதன்போது மாவட்ட கமநல அபிவிருத்தி உதவி ஆணையாளர் தெரிவித்தார்.
கிழக்கு மாகாண கல்வி செயற்பாடுகளை தொடர்ச்சியாக மேற்கொள்வதில் சிரமங்கள் காணப்படுகின்றன. குறிப்பாக கிழக்கு மாகாணத்தில் 2500 க்கு மேற்பட்ட ஆசிரியர் வெற்றிடங்கள் நிலவுகின்றன. திருகோணமலை மாவட்டத்தில் சிங்கள மொழி மூலம் 400 க்கு மேற்பட்ட ஆசிரியர் வெற்றிடங்களும் தமிழ் மொழி மூலம் 700 க்கு மேற்பட்ட ஆசிரியர் வெற்றிடங்களும் நிலவுகின்றன. அது மாத்திரமன்று கல்வித்துறைசார் வெற்றிடங்களும் நிலவுகின்றமையால் மாணவர்களின் கல்விநிலை பாதிப்படையக்கூடிய நிலவரம் உள்ளதாக இதன்போது கிழக்கு மாகாண கல்வியமைச்சின் செயலாளர் குழுவின் அவதானத்திற்கு கொண்டு வந்தார்.
![]() |
கன்னியா பி்தேசத்தில் காணப்படும் கழிவகற்றல் பிரச்சினை , நீண்டகாலமாக காணிகளில் வசிப்பவர்களுக்கான காணி ஆவணங்களை வழங்குவதன் அவசியம், மேய்ச்சல் தரை,யானை வேலிகள் அமைத்தல், மணல் அகழ்வு உள்ளிட்ட பல விடயங்கள் இதன்போது கலந்துரையாடப்பட்டன.
இக்கூட்டத்தில் கிழக்கு மாகாண அமைச்சுக்களின் செயலாளர்கள், திணைக்கள தலைவர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.




Post a Comment