கிண்ணியா பிரதேச சபை பிரிவுக்குள் பிரதேச செயலக உப அலுவலகம் ஒன்றினை ஆரம்பிக்கும் நோக்கில், அந்தப் பிரதேச மக்களின் நன்மை கருதி, சுரங்கல் கிராமத்தில் நடமாடும் சேவை ஒன்று நேற்று (11)ஆரம்பித்து வைக்கப்பட்டது.
கிண்ணியா சூறா சபையின் வேண்டுகோளின் பேரில், கிண்ணியா பிரதேச செயலகத்தினால் இந்த நடமாடும் சேவை ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இதில் பிரதேச செயலாளர், உதவி பிரதேச செயலாளர் ஆகியோர் கலந்து கொண்டதோடு, காணிப்பிரிவு, இறப்பு பிறப்பு பதிவு பிரிவு மற்றும் சமுர்த்தி சேவைகள் சமூக சேவை உட்பட அனைத்து சேவைகளும் உடனடியாக வழங்கப்பட்டன.
இந்நிகழ்ச்சியில் 500க்கு மேற்பட்டோர் கலந்து கொண்டு சேவையினை பெற்றுக் கொண்டனர். மஜித் நகர் கிராம சேவையாளர் பிரிவுக்குட்பட்ட காணி உரித்தானம் இல்லாதவர்களுக்கு ஏற்கனவே தயாரிக்கப்பட்டிருந்த 67 காணி உரித்து ஆவணங்கள் உரியவர்களிடம் கையளிக்கப்பட்டன.
அதேபோன்று பிறப்பு அத்தாட்ச்சி பாத்திரங்களும் சமுர்த்தி கொடுப்பனவுகளும் பாடசாலை மாணவர்களுக்கான "சிப்தொர" புலமை பரிசின் கீழ் புலமைப் பரிசில் பெற்ற 10 மாணவர்களுக்கான புலமை பரிசிலும் வழங்கி வைக்கப்பட்டது.
கிண்ணியா பிரதேச சபை கிராம உத்தியோகத்தர் பிரிவுகளை உள்ளடக்கியதாக இந்த நடமாடும் சேவை ஏற்பாடாகி இருந்தது.
குறித்த நடமாடும் சேவையில், ஆயிலயடி, மஜீத் நகர், மணியரசன் குளம், சூரங்கல், நடு ஊற்று, உப்பாறு, மகரு கிராமம், பூவரஷந்தீவு, சமவச்சம் தீவு, முனைச்சேனே, குறிஞ்சாகேணி, நடுத்தீவு, காக்கா முனை, கச்சக்கொடிதிவு ஆகிய 14 கிராம உத்தியோகத்தர் பிரிவுகளில் வசிக்கின்ற பயனாளிகள் நன்மை அடைந்தனர்.
இங்கு, சேவைகளைப் பெற வருகை தந்த மக்கள், இவ்வாறான சேவையை மாதத்தில் இரு தடவைகளாவது நடாத்த வேண்டும். அப்போதுதான் நாங்கள் நாளாந்தம் படுகின்ற கஷ்டங்களுக்கும் துன்பங்களுக்கும் தீர்வு கிடைக்கும்.
விவசாயத்தையும், மேட்டுநில பயிர்ச் செய்கையையும் கால்நடைகளையும் நம்பி வாழுகின்ற நாங்கள், ஒரு சிறிய சேவையை பெற்றுக் கொள்வதற்கும், அதிகமான பணத்தை செலவு செய்து, பல கிலோமீற்றர் தூரம் கடந்து, கிண்ணியா பிரதேச செயலகத்துக்குச் செல்ல வேண்டும். இன்று நாங்கள் பல நன்மைகளைப் பெற்றிருக்கிறோம். எனவே, இவ்வாறான நடமாடும் சேவையை மாதத்தில் இரு தடவைகளாவது நடாத்த வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.





Post a Comment