(வை எல் எஸ் ஹமீட்)
கல்முனை பிரதேச செயலகத் தீர்வைச் சொல்லியே கடந்த தேர்தலை வென்றார்கள். (இதற்கு முன்பும் அதையே செய்தார்கள்)
அதன்பின் கட்சியை மீறி கோட்டா அரசிற்கு ஆதரவளித்தற்கும் அதையே சொன்னார்கள். கல்முனை மக்களும் நம்பினார்கள்.
வருடங்கள் இரண்டு வழமைபோல் தீர்வன்றியே கழிந்தன.
நடந்து முடிந்த தேர்தலுக்கு முன்வைத்த நிபந்தனைகளுள் கல்முனை செயலகப் பிரச்சினைத் தீர்வையும் த தே கூ முன்வைத்தது. டளசும் எழுத்துமூலம் ஏற்றுக்கொண்டார்.
டளஸ் ஜனாதிபதியாகி இருந்தால் அடுத்த இரண்டொரு வாரங்களுக்குள் கல்முனை செயலகப்பிரச்சினை தமிழர்களுக்கு சாதகமாகத் தீர்க்கப்பட்டிருக்கலாம். ஆண்டாண்டு காலம் முஸ்லிம்கள் கட்டிக்காத்துவந்த கல்முனை மாநகரம் பறிபோயிருக்கலாம்.
இவ்வளவுக்கும் காரணம் கல்முனை மக்கள் தெரிவுசெய்துவருகின்ற பலயீனமான பிரதிநிதித்துவம். இந்நிலையில், இவர்கள் தமது ஆதரவாளர்களினூடாக செய்யும் பிரச்சாரம்,
“ டளஸ் வெற்றி பெற்றிருந்தால் கல்முனை பறிபோயிருக்கும்.”
இதை ஏன் சொல்கின்றார்கள் என்றால், தாங்கள் புத்திசாலித்தனமாக ரணிலுக்கு வாக்களித்ததால் கல்முனை காப்பாற்றப்பட்டிருக்கிறது. தனது தலைமையும் கட்சியும் கல்முனையை காவுகொடுப்பதைப்பதைப்பற்றிக்கூட கவலைப்படாமல் டளசுக்கு வாக்களித்துவிட்டார்கள், என்பதாகும்.
கல்முனை மக்களை எவ்வளவு முட்டாள்களாக எடைபோட்டிருக்கிறார்கள். நிச்சயமாக அவர்களுடைய கணக்கில் தவறுமில்லை. அதைத்தானே ஒவ்வொரு தேர்தலிலும் கல்முனை மக்கள் நிரூபித்துக்கொண்டிருக்கிறார்கள்.
இவர்கள் கூறவில்லை; கோட்டா அரசுக்கு ஆதரவளித்தும் ஏன் கல்முனைப் பிரச்சினையைத் தீர்க்கவில்லை. இவர்கள் தீர்க்கத்திலால்தானே டளசைப் பயன்படுத்தி த தே கூ தங்களுக்கு வாசியாகத் தீர்க்கமுனைந்தது. இதை கல்முனை மக்கள் உணரவே மாட்டார்கள் என்ற நம்பிக்கையா? கல்முனை மக்கள் தொடர்பான இவர்களது கணிப்பு வீண்போவதுமில்லைதான். அதனால்தானே, இரண்டு தசாப்தங்களுக்குமேல் ஒன்றுமே செய்யாதபோதும் தொடர்ந்தும் வாக்களிக்கிறார்கள்.
கல்முனை மார்க்கட் ஒழுகிக் கரைகிறது. எப்போது உடைந்து விழும் என்று தெரியாத நிலை. அப்படியிருந்தும் மார்க்கட் வர்த்தகர்கள் 95% இவர்களுக்குத்தானே வாக்களிக்கிறார்கள்.
உலகத்திலே விந்தையான சிந்தனையாளர்கள் எங்கள் கல்முனை மக்கள்.
போனது போகட்டும்.
நீங்கள் வாக்களித்த ஜனாதிபதி தெரிசெய்யப்பட்டிருக்கிறார். இப்பொழுதாவது கல்முனைப் பிரச்சினையைத் தீருங்கள்.

Post a Comment