(கியாஸ் ஷாபி)
ஒரு கல்வி வலயத்தில் இருந்து இன்னும் ஒரு கல்வி வலயத்துக்கு தங்களது சுய விருப்பின் பெயரில் இடமாற்றம் பெற விரும்பும் கிழக்கு மாகாண ஆசிரியரியர்களிடமிருந்து 2023 ஆம் ஆண்டுக்கான இடமாற்ற விண்ணப்பங்களை கிழக்கு மாகாண கல்வித் திணைக்களம் கோரியுள்ளது.
இந்த இடமாற்றத்துக்கு தமது வலயத்துக்கென வலய இடமாற்ற அதிகாரிகளினால் தீர்மானிக்கப்படுகின்ற உச்சபட்ச சேவை காலத்தினை விஞ்சி சேவை புரிகின்ற ஆசிரியர்கள், மேலும் முதல் நியமன வலய நியமன கடிதத்தின் படி கட்டாய சேவைக் காலத்தினை பூர்த்தி செய்த ஆசிரியர்கள், அத்துடன் நியமன கடிதத்தில் கட்டாய சேவை காலம் குறிப்பிடப்பட்டிருக்காவிட்டால், முதல் நியமன திகதியிலிருந்து 5 வருட சேவைக் காலத்தினை பூர்த்தி செய்த ஆசிரியர்கள் ஆகியோரிடம் இருந்து மேற்படி இடமாற்றத்திற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.
இந்த இடமாற்றத்திற்கு 2022 ஆம் ஆண்டு விண்ணப்பித்தோர் தவிர ஏனையோர் விண்ணப்பிக்க முடியும்.
கிழக்கு மாகாண ஆசிரியர் இடமாற்ற கொள்கைக்கு இனங்க, தங்களது வலயத்தில் உள்ள சகல ஆசிரியர்கள், மற்றும் அதிபர்களுக்கு அறிவித்து அதற்கு அமைவாக ஆசிரியர்களால் அனுப்பப்படுகின்ற சகல இடமாற்ற விண்ணப்பங்களையும் 31.07.2022 ஆம் திகதிக்கு முன்பு மாகாண கல்வி திணைக்களத்துக்கு அனுப்பி வைக்குமாறு சகல வலயக் கல்வி பணிப்பாளர்களுக்கும் அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.
எனவே,வலயத்துக்கு வெளியே இடமாற்றம் பெற விரும்புகின்ற ஆசிரியர்கள், www.ep.gov.lk/en/depteduindex எனும் இணையதளத்தில் 28.06.2022 நாம் திகதி வெளியிடப்பட்டுள்ள மாதிரி விண்ணப்பத்துக்கு அமைவாக விண்ணப்பங்களைப் பெற்று சமர்ப்பிக்கப்பட வேண்டும். இதனை சகல வலய கல்வி அலுவலகத்தின் ஊடாகவும் பெற்றுக் கொள்ள முடியும் எனவும் கிழக்கு மாகாண கல்வித் திணைக்களம் தெரிவித்துள்ளது.

Post a Comment